|
| |
திரு SPB க்கு ஒரு
கடிதம்:
மதிப்பிற்குரிய
பாடும் நிலா பாலு
அவர்களுக்கு,
ஒரு பாமரனின்
புலம்பல் கடிதம்
இது. பல்லாண்டு
காலமாக நீங்கள் என்
வாழ்க்கையில்
செய்து வரும்
அக்கிரமங்களை
வரிசைப்படுத்தி
கேள்வி கேட்கப்
போகிறேன்.
கேள்வி 1: ஏனய்யா என்
வாழ்க்கையில்
இப்படி ஒரு பெரும்
அங்கமாக ஆகிப்
போனீர்கள் ?
எந்த நேரமும்
உங்கள் பாடல்களை
கேட்கும்படியாக
என்னை ஏன் பித்துப்
பிடித்து அலையச்
செய்கிறீர்கள் ?நான்
கருவிலே இருந்து
காதுகள்
முளைத்தபோது கேட்ட
முதல் இசைக்
குரல்கள் உங்கள்
குரலும் திரு
யேசுதாஸ் அவர்களது
குரலும் ஆகும்.
அதாவது உலகில்
பிறந்து தாய்
தந்தையரின்
தாலாட்டு கேட்கும்
முன்னரே உங்கள்
தாலாட்டையும் மற்ற
எல்லா உணர்சிகளும்
உள்ள பாடல்களையும்
கேட்டு முடித்து
விட்டு இருந்தேன்..
கேள்வி 2 : ஒரு தாய்
தானே தன்
குழந்தைக்கு முதல்
பாட்டை பாடவேணுடும்
? அவள் குரல் தானே
அந்தக் குழந்தையை
மகிழ்விக்க
வேண்டும் ? நீங்கள்
ஒரு தாயின் உரிமையை
பறித்தது சரியா ?
என்ன..உலகில் வந்த
உடன் "அம்மா..நான்
உள்ள இருக்கும்போது
SPB , ஜானகின்னு 2 பேர்
பாடிக்கிட்டு
இருந்தாங்களே,
அவங்க எங்கம்மா ?"
என்று கேட்க பேச்சு
வரவில்லை. அந்த
தளிர் வயதிலும்
சிந்தனை மட்டும்
இருந்தது.
மாலை நேரம்.
நெல்லைச் சீமையில்
தக தக என் தங்க
சூரியன் எரிந்து
எல்லாரையும்
இன்னும் காயப்
படுத்திக் கொண்டு
இருக்கிறான்.
வீட்டில் எல்லாரும்
சிவனே என்ரு காப்பி
குடித்துக்கொண்டு
வெய்யிலின்
உக்கிரத்தால்
மந்தமாகி உள்ளனர். "இலங்கை
ஒலி பரப்புக்
கோட்டுத் தாபனம்.
தமிழ்ச் சேவை
இரண்டு..இது ஒரு பொன்
மாலை பொழுது..பாடலை
பாட வருகிறார் S.P.
பாலசுப்ரமணியம்".
வயது நான்கு.
வீட்டுப்பாடம்
எழுதிக் கொண்டு
இருக்கிறேன் ஒரு
குழந்தை மட்டுமே
அமரக்கூடிய குட்டி
நாற்காலியில்.
பாடல் வருகிறது.
சிந்தனை மாறுகிறது.
வீட்டுப்பாடத்தில்
கவனம் இல்லை.
"அம்மா..பொன்மாலை
பொழுதுன்னா
என்னம்மா ?"
"..தங்கம் மாதிரி
ஜொலிக்கிற சாயங்கால
வேளைடா ராஜா"..
எனக்கு புரியவீல்லை.
இதென்ன ?
அநியாயத்திற்கு
சுடுகிறது..இந்த SPB
மாமா சந்தோஷமா
பாடறார் ?" வெளியில்
சென்று
பார்க்கிறேன். தன்
தங்கக் கரங்களைக்
கொண்டு சூரியன்
மஞ்சள் வண்ணம்
பூசிய அந்த வானமும்,
மேகங்கள் இடையே சில
சமயம் ஊடுருவிப்
பாயும் ஒளி
இளஞ்சிவப்பு
வண்ணத்தில் அழகை
வாரித்தெளித்து
விட்டு இருப்பதைம்
உணர்கிறேன்.
அப்போது தான்
சாயங்கால வேளை
என்பதற்கு சூரியன்
சாயம் பூசும் வேளை
என உணர்ந்து
கொண்டேன். அம்மா
சொன்னது புரிந்தது.
வானம் எனக்கு ஒரு
போதி மரம். நீங்கள்
எனக்கு புத்தர்
ஆகிப் போனீர்கள். "அட..SPB
மாமா பாடின மாதிரி
அழகாத்தானே இருக்கு
?" என்று வாசலில்
கால் வைத்தேன்.
விழுந்தது
பிரம்பால் ஒரு அடி. "டேய்..படிக்காம
எங்கேடா போறே ?"
கேள்வி 3: இப்படி ஒரு
சிறுவனை அவன்
அறியாமல் உங்கள்
குரலால்
வசப்படுத்தி, அடி
வாங்க வைத்தது
சரியா ?
சிறுவனாக இருந்த
போது உங்கள்
பாடல்களை உங்கள்
பாடல்கள் என்று
அறியாமல், ரஜினி
அவர்களின் பாடல்கள்
என்று நினைத்து
இருக்கிறென். திரு
ரஜினிகாந்த்
அவர்களின்
வசீகரத்தால்
ஈர்க்கப்பட்ட நான் "ஆ.
ஓஹோ ம்ம் ஹ்ம்ம்..காதலின்
தீபம் ஒன்று என்ற
பாடலை ரஜினிகாந்த்
எவ்வளவு அழகாகப்
பாடுகிறார்..அதோடு
எவ்வளவு சூப்பராக
சண்டையும்
போடுகிறார்" என்று
வியந்து முடியைப்
பின்புறம்
தள்ளிவிட்டு அவரது
ரசிகன் ஆனேன்.
சகலகலாவல்லவன்
படத்தில் "தக தக தக
ததந்தா..இளமை இதோ இதோ..ஆஹா
கமல் சூப்பரா பாடி
ஆடுறார்" என்று
நினைத்து அவருடைய
ரசிகனும் ஆனேன்.
அம்மா அப்பாவிடம் "ரஜினி
மாதிரி சூப்பரா
பாடமுடியாது" என்று
அழுத்திச் சொல்ல.."டேய்
அதை பாடுறது SPB " என்று
சொல்ல..ஒரே
வாக்குவாதம். நான்
நம்பவே இல்லை. ரஜினி
தலையை ஆட்டி
ஆட்டிப்
பாடும்போதெல்லாம்
அதெப்படி இவ்வளவு
அழகாக வேறொருவர்
பாட முடியும் ?
முடியாது என்று
அழுத்தந்திருத்தமாக
நம்பினேன். "டேய்
பாடத்தை படிடா..ரஜினி,
பாட்டு பாடறாராம்..துரை
கேட்குறாராம்"
என்று வசவுச் சொல்
வாங்கினேன்.
கேள்வி 4 : இப்படி
அத்தனை
கதாநாயகர்கள்,
குறிப்பாக திரு
ரஜினி அவர்களுக்கு
பொருந்தும்
படியாகப் பாடி
என்னைப் போன்ற
சிறுவர்களை மயக்கிய
தவறுக்கு என்ன
பதில்
கூறப்போகிறீர்கள் ?
மீசையும் ஆசையும்
அரும்பிய வயதில் "கேளடி
என் பாவையே..ஆடவன்
உன் தேவையே" என்று
என்னை ரோமியோவாக
நினத்து என் கூடப்
படிக்கும்
பெண்ணிடம் பாடி,
அவள் அழுது, என்
வாத்தியார் வந்து
என் காதை திருகியது
ஞாபகம் வருகிறது.
கண்ணில் நீர்
வழிந்தது. வகுப்பு
முடிந்து நண்பர்கள்
வந்து " டேய்..அவ
உனக்கு சரிப்பட்டு
வர மாட்டாடா.. லவ் ல
இதெல்லாம் சகஜம் டா
மச்சி" என்று
உதவாக்கரையான
புத்திமதிகள்
கொடுத்தனர். மனது
கேட்காமல் நைஸாக
மாலை நேரம்
அவளுக்குத்
தெரியாமல் வீடேறிக்
குதித்து என்ன
செய்கிறாள் என்று
பார்க்கப் போனால்,
வானொலியில் "கேளடி
என் பாவையே - இலங்கை
ஒலி பரப்புக்
கூட்டு.."!
உறைந்து போனேன்! "அட..காலைல
நாம பாடினா
வாத்தியார் கிட்ட
அடி வாங்க வெச்சா..இப்போ
என்னடான்ன இந்தாளு
பாட்டை
கேட்டுகிட்டு
இருக்கா ?!". அடுத்த
நாள் போய் மெல்ல
பேச்சுக்
கொடுத்துக்
கேட்டேன். "SPB பாடினா of course
கேட்பேன். இன்னொரு
தடவை வந்து இந்த
மாதிரி பேசினே
பிரின்சிபால் கிட்ட
சொல்லிடுவேன்"
என்று மிரட்ட
பயந்து போய் அந்தக்
காதலை மனதில்
அழித்து விட்டேன்.
கேள்வி 5: நான்
பார்த்து ரசித்துக்
கொண்டு இருந்த
பெண்ணை, உங்கள்
குரலால் வசியப்
படுத்தி, என் பருவக்
காதலை அழித்தது
சரியா ? எதற்கு
இவ்வளவு அழகாகப்
பாடுகிறீர்கள் ?
பிறருக்கு சில
காதலிகளை விட்டு
வைக்கக் கூடாதா ?
கல்லூரிப் பருவம்.
மேடையேறி நம்
பாட்டுத் திறமையை
வெளிப்படுத்தினால்
கொஞ்சம் மாணவர்
வட்டாரத்தில் புகழ்
சம்பாதித்துக்
கொள்ளலாம் என்று
முயன்று தோற்றேன்.
பாட வாய் திறந்த
போதெல்லாம் - "டேய்..SPB
எவ்ளோ உயிர்
கொடுத்து
பாடிருக்கார். நீ
பாடினா அந்த மாதிரி
இல்லைடா" என்று
நண்பர்கள் உண்மையாக
ஆனால் கொடூரமாகக்
கூற எனக்கு
வளரந்தது எரிச்சல். 'ஏன்
இந்த ஆளு என் லைஃப் ல
இவ்ளோ தொல்லை
கொடுக்குறாரு ?
இத்தனைக்கும் இவரை
நேர்ல கூட
பார்த்ததில்லை.
இவரு பாடி
வெச்சிட்டு
போயிட்டதால இப்போ
நம்மளை மாதிரி
ஆளுங்க பாடு
திண்டாட்டமா
இருக்குது' என்று
மனதுக்குள் ஆதங்கம்.
கேள்வி 6 : இவ்வளவு
அழகாகப் பாடச்
சொல்லி உங்களிடம்
யார் கேட்டார்கள் ?
உனக்கென்ன மேலே
நின்றாய் ஓ SP பாலா..?!!!
பாடுவதற்கு முன்,
பாமரப் பாடகர்களைப்
பற்றிச் சிறிதேனும்
சிந்தித்தீர்களா ?
அவர்கள் தங்கள்
வாழ்க்கையில்
யாரிடமாவது,
குறைந்தது அப்பா
அம்மாவிடமாவது
பாடிப் பாராட்டு
பெற்று சிறிது
சந்தோஷப் பட
வேண்டாமா ? அந்த
நல்லெண்ணம் கூட
உங்களுக்கு இல்லையா
? ஒவ்வொரு முறை
பாடும்போதும்
நீங்கள் எப்படி
பாடி
இருக்கிறிர்கள்
என்று சுட்டி
காட்டி பாமரர்களான
எங்களது நிலையைக்
கொடூரமாக புரிந்து
கொள்ளவைக்கிறார்களே
? இது தேவையா
எங்களுக்கு ?
கல்லுரி முடிந்து
கடல் கடந்து
வந்தாயிற்று. "அக்கம்
பக்கம் பாரடா சின்ன
ராசா..தேசம் உனக்கு
செஞ்சது ஏராளம்
இங்கே உண்டு..தேசத்துக்கு
நீ என்ன செஞ்சே
உன்னக் கேட்டு நீ
பதில் சொல்லு"..
கேள்வி 7: இந்தப்
பாட்டை
முக்கியமாகப் பாடி
எங்களின்
மனசாட்சியைக் காயப்
படுத்தவேண்டுமா ?
தாலாட்டுக்களை
திருடினீர்கள்
பொறுத்தேன்.
காதலைத்
திருடினீர்கள்,
பொறுத்தேன்.
இப்போது தத்துவமும்
பாடுகிறீர்கள்.
வாழ்வின் ஒவ்வொரு
அசைவிலும் இப்படி
என்னை உங்கள்
பாடல்களால் விடாமல்
துரத்த வேண்டுமா ?
இது உங்களுக்கே
நியாயமா ?
இனி எனக்கு காதலி
கிடைத்து "எனக்கொரு
காதலி
இருக்கின்றாள் "
என்று நண்பர்களிடம்
சொன்னால், "செம
பாட்டுடா..SPB கலக்கல்"
என்பார்கள்.
எனக்குக் கல்யாணம்
ஆனால் "நூறு வருஷம்
இந்த மாப்பிளையும்
பொண்ணும்" என்று
அங்கேயும் ஒலிக்க
விடுவார்கள். என்
மனைவிக்கு "கல்யாண
மாலை கொண்டாடும்
பெண்ணே" என்று
போட்டுக்காட்டுவார்கள்.
மனைவியைக் காதலுடன்
பார்த்தல், அவள் "சென்யோரிடா
ஐ லவ் யு" பாட்டை
பாடச் சொல்லப்
போகிறாள். பிள்ளை
பிறந்தால் அது "தேனெ
தென் பாண்டி மீனே"
கேட்கும்..அது
இல்லாமல், மண முறிவு
ஏற்பட்டால் " மன்றம்
வந்த தென்றலுக்கு..நிலாவே
வா"..
சரி லௌகீகம்
வேண்டாம் ஆன்மீகம்
போவோம் என்றால்
அங்கேயும்
துரத்துகிறீர்கள்.
சிவனைக் கும்பிட
வேண்டும் என்றால் "பிரம்ம
முராரி சுரார்ச்சித",
கண்ணனைக் கொஞ்ச
வேண்டும் என்றால் "ஆயர்
பாடி". நான் இறந்து
போகும் நேரத்தில்
எனக்கு நினைவு வரப்
போவதற்கு "மண்தான்
கடைசியில்
ஜெயிக்கிறது" என்று
பாடி
வைத்துவிட்டீர்கள்.
இப்படி வாழ்வின்
ஒவ்வொரு
கட்டத்திலும் என்னை
உங்கள்
பாட்டுக்களால்
பாடாய்ப் படுத்த
வேண்டுமா ? அதனால்..
இத்தனை குற்றங்கள்
செய்து என்
வாழ்வினை முழுமையாக
என் அனுமதி இன்றி
ஆக்கிரமித்துகொண்ட
உங்களுக்கு நான்
என் மனச்சிறையில்
ஆயுள் தண்டனை
விதிக்கிறேன்.
உங்களுக்கு
எப்போதாவது
வெளியில் போய்
விட்டு வரவேண்டும்
என்றால் சிறிது
நேரம் 'பரோலில்'
அனுப்பி வைக்கிறேன்.
மற்றபடி என்னை
உங்கள்
பாட்டுக்களுக்கு
நீங்கள்
அடிமையாக்கியதற்கு
பழிக்குப் பழியாக,
என் மனச்சிறையினில்
நீங்கள் அடைபட்டுக்
கிடக்க வேண்டியது
தான். அங்கே
உங்களுக்கு 60
ஆண்டுகள் மட்டும்
இல்லை. என்
ஆயுளுக்கும்
சேர்த்து தண்டனை
அனுபவியுங்கள்.
தங்கள் அன்புள்ள
முரளி வெங்கட்ராமன்
© Dhool.com 2006 - All rights reserved.
|